Thursday, June 28, 2007

யார் நான்



இரு வாரங்களுக்கு பின் ஒரு இனிய இரவு. சுவரில் மாட்டியிருந்த டிஜிட்டல் கடிகாரம் "21:34" என்று துடித்துக் கொண்டிருந்தது. இருபத்தி இரண்டுக்கு இருபது அடி சதுரமாகயிருந்த அந்த அறையை, கிட்டத்தட்ட பாதிக்குமேல் அந்த இயந்திரம் ஆக்கிரமித்திருந்தது. அது உலகின் முதல் டெலிபோர்டிங் இயந்திரத்தின் ஸென்டிங் எண்ட், அதாவது அனுப்பும் முனை. அதன் ஓரத்திலிருந்த டெஸ்ட்ராயர் மாட்யூலின் பக்கங்களிலிருந்த எலக்ட்ரான் கன்களின் கண்களுக்குள், பூர்ணா தனது கண்களால் ஆராய்ந்து கொண்டிருந்தாள். சிறிது நேரத்திற்கு பின், எலக்ட்ரான் கன்களின் வயர்களை, கன்ட்ரோல் பேனலுடன் இணைக்க ஆரம்பித்தாள். அவளுடைய கணக்கின்படி இன்னும் பத்து நிமிஷத்தில் வேலை முடிந்து விடும். ஏற்கெனவே பிரவீன் தனது வீட்டிலிருந்த ரிசீவிங் எண்ட் (சேரும் முனை) இயந்திரத்தை தயார் செய்து முடித்து விட்டான். இவளுடைய வேலை மட்டும்தான் பாக்கி.

இவர்களது டெலிபோர்டிங் இயந்திரத்தின் தத்துவம் எளிமையானதுதான். நமது வீட்டு டெலிஃபோன்களும், செல்ஃபொன்களும் செயல்படும் அதே முறையில்தான் இந்த டெலிபோர்டிங் இயந்திரமும் செயல்படுகிறது. ஃபோனில் குரல் மட்டுமே கடத்தப்படுகிறது. ஆனால் இந்த இயந்திரம் உயிர் உள்ள/இல்லாத எந்த பொருளையும் கடத்தும்.

எல்லா பொருள்களின் அடிப்படை விஷயம் இரு வகையான துகள்கள்தான்(Particles). க்வார்க்(Quark), லெப்டான்(lepton) என்ற இந்த இருவகையான துகள்களால்தான் இந்த மாபெரும் அண்டத்திலிருக்கும் எல்லா பொருள்களுமே உருவாகியிருக்கின்றன. இந்த துகள்கள் அணுவிலிருக்கும் ப்ரோட்டான், எலக்ட்ரான்களையும் நுணுக்கிப் பார்த்தால் கிடைப்பவை. இந்த துகள்களில் சில உட்பிரிவுகளும் உண்டு.

கடத்தப்பட வேண்டிய பொருளிலிருக்கும், இந்த எல்லா துகள்களின் குணாதிசியங்களையும் பிரதியெடுத்து, அவற்றை மின்னனு அலைகள் மூலம் ஸென்டிங் எண்டிலிருந்து, ரிசீவிங் எண்டுக்கு அனுப்பி, ரிசீவிங் எண்டில், கிடைத்த தகவல்களின் படி, க்வார்க்குகளையும் லெப்டான்களையும் கொண்டு மீண்டும் பொருளை உருவாக்கியபின், ஸென்டிங் எண்டுக்கு தகவல் அனுப்பி, டெஸ்ட்ராயர் மூலம் மூலப்பொருளை அழிப்பதுதான், பூர்ணாவும் பிரவீனும் கண்டுபிடித்துள்ள டெலிபோர்டிங் இயந்திரத்தின் ஒன் லைன் தத்துவம்.

இணைப்புகளை பொருத்தி முடித்ததும், கன்ட்ரோல் பேனலில் எலட்ரான் பீமின் தாக்கத்தை, தனது உடலுக்கு ஏற்ற அளவுக்கு செட் செய்தாள். எல்லாம் சரியாக இருக்கிறதா என்று மீண்டுமொருமுறை சரி பார்த்தாள்.

பிரவீனின் செல்ஃபோனை அழைத்தாள்.

"ஹாய் டா! உன்னோட காலுக்காகத்தான் வெய்ட் பண்ணிட்டிருந்தேன். வேலை முடிஞ்சுதா?" பிரவீன் உற்சாகமாக கேட்டான்.

"ம்ம்" என்றாள் கொஞ்சம் நடுக்கத்துடனே.

"எல்லாத்தையும் ஒரு தடவை ரீ செக் பண்ணியா?"

"ம்ம்"

"என்ன, பயமாயிருக்கா? வேனும்னா முதல் தடவை நான் மெஷின் மூலமா வரட்டுமா"

"சே, சே! பயமெல்லாம் இல்லை. ஆனாலும் கொஞ்சம் நெர்வஸா இருக்கு. நானே வரேன். நீ அங்கே எல்லாம் ரெடி பண்ணிட்டியா?"

"ம்! எல்லாம் பக்காவா இருக்கு. மெத்தை மேல பூ தூவி வச்சிருக்கேன். பெட் ரூமை கூட ரூம் ஃபிராக்ரென்டெல்லாம் அடிச்சி வாசமா வச்சிருக்கேன். வெய்டிங் ஃபார் யூ!!" சொல்லிவிட்டு குறும்பாக சிரித்தான்.

"ச்சீ! அதில்லைடா. மெஷின் ரெடியா இருக்கா?"

"ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடிதானே அந்த குரங்கு குட்டியை கடத்தினோம். ரெடியாதான் இருக்கு."

"மெஷினை ஆன் பண்ணு."

"ம். பண்ணியாச்சு."

"கம்யூனிகேஷன் சானல் ஆன்லைன்ல இருக்கா?"

"இங்கே ஆன்லைன்லதான் இருக்கு."

பூர்ணா, தனது அறையிலிருந்த இயந்திரத்தை, கம்யூனிகேஷன் சானலை உயிர்ப்பித்து ரிசீவிங் எண்டோடு இணைப்பை ஏற்படுத்தினாள்.

"ம்ம். உன்னோடதும் இப்ப ஆன்லைன்ல வந்திருச்சு.", தனது கன்ட்ரோல் பேனலை பார்த்தவாறு பிரவீன், "பூர்ணா, எலக்ட்ரான் பீமோட இன்டென்ஸிட்டியை சரியா செட் பண்ணிட்டியா?" என்று கேட்டான்.

"ம். பண்ணிட்டேன். நான் இப்ப மெஷினொட கேபினுக்குள்ள போறேன். ஃபோனை வச்சுடறேன். ஸீ யூ தேர்!" சொல்லிவிட்டு செல்ஃபோனை கட் செய்தாள்.

பிரவீன் கண்ட்ரோல் பேனலின் திரையையே பார்த்துக் கொண்டிருந்தான். அதில் மஞ்சள் நிறத்தில் "Listening..." என்று மினுங்கி கொண்டிருந்தது. சரியாக இருபது வினாடி கழித்து "9.12031 e+3792 Packets received" என்று பச்சை நிறத்தில் மின்னியது. அடுத்த வினாடி கம்யூனிகேஷன் சானல் ஒரு முறை சிகப்படித்தது. ஒரு வினாடி கழித்து மீண்டும் பச்சையாக உயிர்ப்பித்து கொண்டது.

ஆனால் அந்த ஒரு வினாடி சிகப்பு பிரவீனை நிறையவே கலவரப்படுத்தியது. ரிசீவிங் சேம்பரை பயத்துடன் பார்த்தான்.

ரிசீவிங் சேம்பரின் இடுக்குகளில் வெள்ளை ஒளி மேலிருந்து கீழாக ஒரு முறை இறங்கியது. அடுத்த வினாடி சேம்பரின் கதவு திறந்தது.

பரவசமான ஒரு நிலையில் அவன் முன்னே, பூர்ணா முழுதாக நின்று கொண்டிருந்தாள். "பிரவீவீவீன்!!!"
- தொடரும்

Sunday, June 24, 2007

யார் நான்

அத்தியாயம் ஒன்று


"உன் கண்ணாடியின்
வழியே தெரியும்
உலகம்
அது சின்னஞ் சிறியது
அதில் எப்பொழுது சிறை வைத்தாய்
என்னை?
"

"நான் கண்ணாடி போட்டிருக்கிறதை கிண்டல் பண்றியா?", பிரவீனை கோபமாக முறைத்தாள்.

"ஐயையோ!!! பூர்ணா, நான் அப்படி சொல்லலை. வந்து அது கூட அழகாயிருக்குன்னுதான் சொல்ல வந்தேன்."

"அப்ப, நான் அழகாயில்லை. அப்படித்தானே."

"நீ அழகாயில்லைன்னு சொன்னா எனக்கு கண்ணு அவிஞ்சு போச்சுன்னு அர்த்தம். இப்ப பாரு. ம்ம்ம். ஆங்!

படபடக்கும் உன் விழிகள் கண்டு
பூக்களெல்லாம் இதழ் விரிக்கின்றன
பட்டாம்பூச்சி வந்து விட்டெதென்று!

இது எப்படியிருக்கு?"

"நான் ஏற்கெனவே நிலாரசிகனையெல்லாம் படிச்சு முடிச்சுட்டேன். வீணா கடன் வாங்கி கஷ்டப்படாதே! சொந்தமா யோசிக்கவே மாட்டியா?"

"அப்ப நான் திங்க் பண்றதேயில்லையா?", பிரவீனின் முகம் தொங்கி போனது.

"ஏய்! ச்சும்மா ஜாலிக்கு சொன்னேன்பா. நீ எவ்ளோ பெரிய விஞ்ஞானி? எவ்ளோ பெரிய ஆராய்ச்சியில ஈடுபட்டிருக்க!"

"நானா, நீயா? நீதானே அந்த ஆராய்ச்சிக்குத் தலைவி. நீ அதைப் பண்றதாலேதானே நானும் அதை பண்ணிட்டிருக்கேன்"

"அப்ப உனக்கு இதுல இன்ட்ரெஸ்ட் இல்லையா?"

"இருக்கு. ஆனா அதைவிட பல மடங்கு உன்மேலதான் இருக்கு. அது உனக்கு புரியாததுதான் எனக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கு."

"புரியுதுப்பா!!!"

"அப்ப ஏன் எப்ப கல்யாண பேச்செடுத்தாலும் தள்ளிப் போடற?"

பூர்ணா ஒரு நீளமான பெருமூச்சு விட்டாள். "பிரவீன்! நாமளும் எல்லாரையும் மாதிரி கல்யாணம் பண்ணிக்கத்தான் வேணுமா?"

"ஏய்! என்ன சொல்ற?" வேகமாக கேட்டான்.

"அதில்லை. அதாவது வாழறதுக்கு கல்யாணம்ங்கறது என்ன அவசியம்? இப்ப நம்ம ரெண்டு பேரோட ஆசையென்ன? கடைசி வரைக்கும் நீயும் நானும் சேர்ந்து வாழனும்ங்கிறது. இதுக்கு கல்யாணம் அவசியமா?"

"அவசியமில்லையா?"

"எனக்கு உன்மேல நம்பிக்கையிருக்கு. நீ கடைசிவரைக்கும் எனக்கு துரோகம் பண்ணமாட்டேன்னு முழுமையா நம்பறேன். உனக்கும் என்னைப் பத்தி அதேதான். அப்புறம் எதுக்கு கல்யாணம்? நாம ரெண்டு பேரும் சேர்ந்து வாழலாமே, கல்யாணம் பண்ணிக்காம"

மீசையை வருடிக்கொண்டே சிறிது நேரம் யோசித்தான். "பூர்ணா! யோசிச்சுப் பார்த்தா நீ சொல்றது சரின்னு தோனலைன்னாலும், தப்பில்லைன்னு தோனுது. எனக்கு நீதான் முக்கியமேயொழிய கல்யாணமில்லை. நாம நமக்காகத்தான் வாழனுமேயொழிய, அடுத்தவங்களுக்காக இல்லை. நீ சொன்னபடியே சேர்ந்து வாழலாம். நாள் நட்சத்திரம் கூட பார்க்க வேணாம். இன்னைக்கே ஆரம்பிக்கலாம்."

"அவசரப்படாதே! ஆனா அதுக்கும் நேரங்காலமெல்லாம் இருக்கு. நம்ம ஆராய்ச்சி வெற்றிகரமா முடியற கட்டத்துல இருக்கு. அது வெற்றியடைஞ்சதும் நாம் சேரலாம்."

"ஆனா, அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம். அது எப்படியும் வெற்றியடையற பிராஜக்ட். சக்ஸஸ் ரேட் 98%. அதுக்காக இதையேன் தள்ளிப் போடனும்?"

"ப்ளீஸ். இன்னும் கொஞ்ச நாள்தானே? மாசக் கணக்கு கூட இல்லை. நாள் கணக்குதான். ஒரு வாரமோ இரண்டு வாரமோ? அது வரை பொறுக்க மாட்டியா? இந்த நேரத்தில் நாம அவசரப்பட்டால் டைவர்ட் ஆயிடுவோம். ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்காத கதையாய்டும். அதுனாலதான் சொல்றேன். ப்ளீஸ்! புரிஞ்சுக்க! இது என்னோட லட்சியக் கனவு!!!"

"நீ இப்படி சொல்வேன்னு எதிர்பார்த்தேன். சரி, இன்னும் ரெண்டு வாரம்தானே. பொறுக்கலாம். இன்னும் நமக்கு டெஸ்ட்ராயர் மாட்யூல்லயும், கம்யூனிக்கேஷன் ரிசீவர்லயும்தான் சின்ன சின்ன பிரச்சனைகள் இருக்கு. இப்பவே முயலை கடத்தியாச்சு. ரிசீவர் எண்ட் பிரச்சனைகளை நான் பார்த்துக்குறேன். அதுக்கு என்கிட்ட சில ஐடியாஸ் இருக்கு. டெஸ்ட்ராயரை நீ கவனிக்க முடியுமான்னு பாரு. இல்லைன்னாலும் ரிசீவர் வேலைகள் முடிஞ்சதும், ரெண்டு பேரும் சேர்ந்து அதை கவனிக்கலாம்"

"ம்ம். சரி! ஆனா டெஸ்ட்ராயர்ல மனித உடம்பை பிரிச்சு விடும்போது வலி தெரியாம இருக்கிறதுங்கறது சின்ன பிரச்சனைதான். என்கிட்ட அதுக்கு ஒரு சொல்யூஷன் இருக்கு. அது வொர்க் அவுட் ஆகும்னு நினைக்குறேன். அப்படி வொர்க் ஆகலைன்ன வேற வழி யோசிக்கனும்"

"எது? முன்னாடி பூனையை கடத்தும்பொழுது உபயோகப்படுத்துனோமே. அந்த மெத்தடா?"

"ஆமாம். ஆனா அதுலேயே எலக்ட்ரான் பீமின் தாக்கத்தை கூட்டி கொடுக்கனும். இன்னும் 15 மடங்கு."

"நல்ல ஐடியாதான். அது வொர்க் ஆகும்"

"பிரவீன்! கொஞ்சம் யோசிச்சு பார்த்தியா? மனிதனை சக்ஸஸ்ஃபுல்லா கடத்துனத்துக்கப்புறம், இந்த உலகம் முழுக்க நம்மை பத்திதான் பேசுவாங்க! புக் போடுவாங்க!! பேட்டி எடுப்பாங்க!! இதைப்பத்தி இன்னும் ஆராய்ச்சி பண்ணுவாங்க!!!"

"பூர்ணா! பொதுவா நான் எப்பவுமே காரியத்தை முடிச்சதுக்கப்புறம், நமக்கு என்ன கிடைக்கும்னு யோசிக்கிறதில்லை. உனக்கே தெரியும். அப்பதான் அந்த காரியத்தை ஒழுங்கா பண்ணி முடிக்க முடியும். ஆனாலும், இதுல இன்னும் சில விஷயங்களை நீ யோசிக்க விட்டுட்டே. நாம கண்டுபிடிச்சிருக்கிறது முதல் டெலிபோர்ட்டிங் மெஷின். இது வரைக்கும் ஒளியைத் தவிர ஒரு அஃறினை பொருளை கூட ஓளி வேகத்தில் ஒரு இடத்துல இருந்து இன்னொரு இடத்துக்கு கடத்த முடியாது. ஆனா நாம கண்டுபிடிச்சிருக்கிறதுல மனுஷனையே ஒளி வேகத்துல ஒரு இடத்துலயிருந்து இன்னொரு இடத்துக்கு கடத்தலாம், உயிரோட!! இப்படியொரு கண்டுபிடிப்பு உலகத்துல நிகழ்ந்ததுக்கப்புறம் என்னெல்லாம் நடக்கும்? நீ இங்கயிருந்து அமெரிக்காவுக்கு கண்ணை மூடித் திறக்கறதுக்குள்ள போய்ட்டு வரலாம். உண்மையில அதவிட கம்மியான நேரத்துல! இப்ப இருக்குற பயண விதிமுறைகளெல்லாம் இதனால வருங்காலத்துல மாறிப்போகும். இதுக்கு தனியா பாஸ்போர்ட், விசா எல்லாம் கொண்டு வந்தாலும் வருவாங்க. நிலாவுக்கு கூட அதிகபட்சம் ஒன்றரை வினாடில போயிரலாம். முக்கியமா, நீ உங்க வீட்டுலயிருந்து என் வீட்டுக்கு உடனடியா வந்துரலாம்"

"என்னது?!", என்று முறைத்தாள்

"நம்ம டெலிபோர்ட்டிங் மெஷின் மூலமா சொன்னேன்மா. இப்பவே வரச் சொன்னா, அதான் வர மாட்டேன்னுட்டியே!!"


-தொடரும்