Thursday, October 18, 2007

விடுமுறை

ஒரு வழியாக வான டிராஃபிக் ஜாம்களைத் தாண்டி, செல்வா ஸ்டேஷன் வந்து சேர்ந்தான். அவனது திட்டப்படி, ஏற்கனவே இரண்டு நிமிடங்கள் லேட்.

ஸ்டேஷனில் நடப்பதே கஷ்டமாயிருந்தது. தீபாவளிக் கூட்டம். நல்லவேளை! மூன்று மாதத்திற்கு முன்பே முன்பதிவு செய்திருந்தான். அதனால் கவலையில்லை. ஆறு மாதமாயிற்று - கடைசி முறை அவன் வீட்டிற்கு சென்று. இந்த முறை பத்து நாட்கள் - தீபாவளி விடுமுறை.

இருக்கையைத் தேடிப் பிடித்து அமர்ந்தபொழுது சந்தோஷமாக இருந்தது. வீட்டுக் குழந்தைகளுக்கு வாங்கியிருந்த, விளையாட்டு ஜாமானான அந்த மடிக்கணிணியே, பாதி பேக்கை அடைத்துக் கொண்டிருந்தது. அழுக்குத்துணிகளை பெரிய பிளாஸ்டிக் பையில் கட்டியிருந்தான். வீட்டிற்குப் போய் நல்ல தண்ணீரில் துவைக்க வேண்டும்.

வண்டி கிளம்பும் நேரம் வந்தும், இன்னும் கிளம்பாமல் இருந்தது. கூட்டம் அதிகமிருந்ததால், கொஞ்சம் தாமதித்துதான் எடுப்பார்கள் என்று அருகிலிருந்தவர் சொன்னார். எப்பொழுது கிளம்பினாலும், வீட்டிற்குப் போய் சேர்ந்தால் சரிதான் என்று நினைத்துக் கொண்டான்.

தனது இருக்கையில் வசதியாக சாய்ந்து கொண்டு யோசித்தான். இந்த நிலத்தில் வேலை செய்வது இப்பொழுது அவனுக்கு வெறுத்துவிட்டது. குடிப்பதற்கு மாதத்திற்கு ஒரு முறை பத்து லிட்டர் மட்டுமே நல்ல தண்ணீர் மஞ்சள் நிறத்தில் கிடைக்கிறது. குளிப்பதற்கெல்லாம் அந்த வாடைவீசும் கறுப்பு நீர்தான். அதுவும் தினசரி ஒரு பக்கெட்தான். இதனாலேயே செல்வா பல நாட்கள் குளிப்பதில்லை. வீட்டிற்குப் போய் ஒரு நல்ல குளியல் போட வேண்டும். இங்கே காற்று கூட கறுப்பாயிருக்கிறது. வெப்பம் வேறு அறுபது டிகிரிக்கு கீழ் குறைவதில்லை.

என்ன எழவிற்காக இங்கே இன்னும் வேலை செய்ய வேண்டும். பேசாமல், வீட்டிற்கு அருகிலேயே ஏதாவது ஒரு வேலை தேடிக் கொள்ள முடியாதா? தினசரி வீட்டுச் சாப்பாடாவது கிடைக்கும். ஒரே ஒரு காரணம்தான். சம்பளம்! இந்த இடத்தில் கிடைப்பது போன்ற சம்பளத்தில், பாதிகூட அங்கு அவனுக்குக் கிடைக்காது. இதை நினைக்கும்பொழுது செல்வாவிற்கு, அவன் மேலேயே கோபம் வந்தது. 'சே! கேவலம் பணத்திற்காக என்னையே விற்கிறேனே!'. சந்தோஷமாக ஆரம்பமான சிந்தனை, சுயபரிசோதனையால் பச்சாதாபமானதில், முடிவில் கோபமே மனதில் தங்கியது.

"த்தம்ப்பி..." என்ற தெத்துக் குரல் அவன் சிந்தனையை தாக்கியது. திரும்பி பார்த்தான். மிகவும் நைந்து போயிருந்த உடையில் அந்த வயதான கிழவி, அவனை நோக்கி கை நீட்டினாள். அவன் அவளை ஒரு விநாடி மேலிருந்து கீழாக பார்த்தான். ஊனம் எதுவுமில்லைதான். ஆனாலும் இத்தனை வயதிற்கு மேல் அந்தக் கிழவி வேறு எந்த வேலையும் செய்து பிழைக்க முடியாது. அவள் நீட்டிய இயந்திரத்தில் தன் கைவிரல் ரேகையை பதித்து, பின் 100 என்று டைப் செய்தான். 'ரூ.' என்று தானாகவே சேர்ந்து கொண்டது. அந்தக் கிழவி அவனை வாழ்த்திவிட்டு அடுத்த இருக்கை நோக்கி மெதுவாக ஆடி ஆடி நகர்ந்தாள். அவளையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தவன் நினைத்துக் கொண்டான், 'இவள் கூட ஒரு வகையில் சுதந்திரமானவளோ?!'

அப்பொழுது வண்டி கிளம்பும் அறிவிப்பு ஒலிக்க ஆரம்பித்தது. "ஏரோ ஸ்பேஸ் எர்த் ஸ்டேஷனிலிருந்து, நிலவிற்கு செல்லும் ஸாலிட்டர் ஸாட்லைட் ஷட்டில், இப்பொழுது கிளம்பவிருக்கிறது."

Wednesday, October 10, 2007

இருபத்தி மூன்றாவது கதை

"கிடைச்சிருச்சி" ராஜேஷ் கத்தினான்.

"என்ன?"

"இருபத்தி மூன்றாவது கதை"

"ரியலி? எங்கே கிடைச்சுது?"

"இந்த பழைழழய ஹார்ட் டிஸ்க்கில்", அழுத்திப் பிடித்தால் உடைந்து விடக் கூடிய அந்த சின்ன தகடு பயங்கர அழுக்காய் இருந்தது.

"ஹார்ட் டிஸ்க்கா?"

"ஆமாம். அப்போவெல்லாம் இதைத்தானே கம்யூட்டர்ஸ்ல யூஸ் பண்ணாங்க!?"

"அதுக்கில்லை. அச்சுப் பிரதி, கையெழுத்துப் பிரதி ஏதும் கிடைக்கலியா?"

"இல்லை. எனக்குத் தெரிந்து அவர் கையெழுத்துப் பிரதியா ஏதும் எழுதினதா தெரியலை. எல்லாமே கம்ப்யூட்டர் ஃபைல்ஸ்தான்."

"பட், அட்லீஸ்ட் அச்சு?"

"ம்ம்ம். மே பி, இந்த கதை எதிலேயும் பிரசுரம் ஆகாமலிருந்திருக்கலாம்."

"அப்புறம் எப்படி இதுதான் இருபத்தி மூன்றாவது கதைன்னு சொல்றே?"

"தலைப்பை பாரு", திரையில் விரிந்த கதையில் மேலிருந்த தலைப்பை ராஜேஷ் காட்டினான்.

"ஒரு வேளை ஒரு அட்ராக்ஷனுக்காக இப்படி தலைப்பு வச்சிருக்கலாம்ல. இதை மட்டும் வச்சுகிட்டு, இதுதான் இருபத்தி மூன்றாவது கதைன்னு எப்படி சொல்ல முடியும்."

"சரி, இன்னொரு தியரி சொல்றேன் சரியா இருக்கா பாரு. நாம இப்ப, அவரோட இருபத்தி நாலாவது கதை வரைக்கும் கண்டுபிடிச்சுட்டோம். இன்னும் முதல் இருபத்தி மூன்று கதைகள்தான் பாக்கி. ஸோ, இது இருபத்தி மூன்றுக்கு மேல இருக்க முடியாது. இருபத்தி நாலாவது கதை எழுதப்பட்ட தேதி 17, அக்டோபர் 2007. இந்த கதை எழுதப்பட்ட தேதியப் பாரு. 10, அக்டோபர் 2007. ஒரு வாரம்தான் வித்தியாசம். அதனால இதுதான் இருபத்தி மூன்றாவதா இருக்க முடியும்."

"ஆனா ஒரு விஷயம். சமயத்துல இந்த மாதிரி ஆளுங்க ஒரே நாள்ள பத்துக் கதை கூட எழுதுவாங்க."

"பத்தெல்லாம் ஓவர். இவர் ஒரு தடவை ஐந்து கதை, ஒரே நாள்ள எழுதினதா நானும் படிச்சிருக்கேன். ஆனாலும் அவையெல்லாம் ரொம்பவும் சின்ன சின்ன கதைகள்தான்னும் படிச்சிருக்கேன். ஆனா இதைப் பாரு ஒரு சிறுகதை அளவுக்கு இருக்கு."

"இது சிறுகதைதான். ஆனா, இதுக்கப்புறமா, அந்த ஒரு வார கேப்ல, ஏன் அந்த மாதிரி ஏதாவது ஒரு சின்ன கதை எழுதியிருக்க கூடாது."

"நீ சொல்றது பாஸிபிள்தான். ஆனா, இருபத்தி நாலாவது கதை, இதுக்கடுத்த ஒரு வாரத்தில். அதே நேரம் இந்தக் கதையோட தலைப்பு, ரெண்டையும் சேர்த்து பார்த்தா, இதுதான் இருபத்தி மூன்றாவதா இருக்க முடியும்."

"இணைய குப்பைகளில் ஏதாவது ஆதாரம் கிடைக்குதான்னு பார்த்தியா?"

"பார்த்தேன். ஆனா, இருநூறு வருடத்துக்கு மேற்பட்ட இணைய குப்பைகளைத்தான் அழித்து விடுகிறார்களே. அதனால், ஆதாரம் எதுவும் அதில் கிடைக்கலை."

"ம்ம். கதை எப்படியிருக்கு."

"இந்த கதை சுமாராதான் இருக்கு. அதனாலதான் எதிலேயும் பிரசுரமாகியிருக்காதுன்னு சொல்றேன்."

"ஸ்டுப்பிட் மாதிரி பேசாதே, கதை சுமாராயிருக்கிறதுக்கும் பிரசுரமாகிறதுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் கிடையாதுன்னு உனக்குத் தெரியாதா? 'பத்திரிக்கை ஆசிரியர்கள் அறையில் இருக்கும் குப்பைத்தொட்டி மிக ஆழமானது. பல எழுத்தாளர்களின் எதிர்காலங்கள் அதில் மூழ்கடிக்கப்படுகின்றன'ன்னு ஒருத்தர் சொல்லியிருக்கார் தெரியுமா?"

"அப்படியா? யார் சொன்னது இது?"

"இப்படி திடீர்னு கேட்டா எப்படி? நானே சொன்னதுதான்னு வச்சுக்கோயேன்."

ராஜேஷ் அவனை முறைத்தான். "நீயும் உன் ஜோக்கும்!" சலித்துக் கொண்டான்.

"சரி, இதை எழுதினது கன்ஃபார்மா...??!"

"கன்ஃபார்ம்டா அவரேதான்!"

"எப்படி அவ்வளவு உறுதியா சொல்றே?"

"இங்கே பாரு" காற்றில் விரிந்திருந்த அந்த மாயத் திரையில், கதையின் கடைசிக்கு சென்று, முடிவில் வலது ஓரத்தில் எழுதியிருந்ததை, ராஜேஷ் சுட்டிக் காட்டினான்.

'- எழுதியவர் யோசிப்பவர்'