Friday, February 27, 2009

௨௲௧௧

எனது காலப்பேசி ஒரு முறை கதறி ஓய்ந்தது. எடுத்துப் பார்த்தேன். பூர்ணாதான் தகவல் அனுப்பியிருந்தாள்.

"95BEB2AACDAAC79ABFAFBFB2CD 85B4C895CD95BEA4C7 B59AAEBE95 AEBE9FCD9FBF95CD 95CAA3CD9FC1 B5BF9FCD9FC7A9CD B0BE AA9FCD AAC09FCD 9ABEB2C895CDE7C1 E8F2E7E7 EA E8F0 95BEB2C8 EF E9F095CD95C1 B5BE"

’என்ன இது. ஒன்றுமே புரியவில்லை!? என்ன அனுப்பியிருக்கிறாள்?’ அவள் வீஃபோனுக்கு அழைத்தேன். பூர்ணாவின் டிஜிட்டல் உருவம் திரையில் தோன்றி, "நான் தற்பொழுது இந்த நொடியில் இல்லை. காலப்பயணம் முடிந்து திரும்பியதும் உங்களைத் தொடர்பு கொள்கிறேன்." என்று திரும்பத் திரும்பக் கூற ஆரம்பித்தாள்.

’காலப் பயணம் போயிருக்கிறாளா? என்னிடம் ஒரு வார்த்தைக் கூட சொல்லவில்லை. எப்பொழுது இயந்திரத்தை வாங்கினாள்? அல்லது வாடகை இயந்திரத்தில் போயிருக்கிறாளா? அவள் காலப்பேசிக்கு அழைக்கலாமா?’

காலப்பேசியை எடுத்து அவள் பெயரைத் தேடி அழுத்.. ’அந்தத் தகவல்?! அது ஏன் அப்படியிருந்தது? ஒரு வேளை ஏதாவது செய்தியை மறைத்து அனுப்பியிருக்கிறாளா? அப்படியானால் இப்பொழுது அவளை அழைப்பது சரியாக இருக்காது’ என்று தோன்றியது.

அவள் அனுப்பியிருந்த தகவல் என்னைக் குழப்பியது. அதைப் புரிந்து கொள்ள முயன்றேன். ’என்னவாக இருக்கும்? எப்படி டீக்ரிப்ட் பண்ணுவது?’

அந்த செய்தியை எனது கணிணியில் கொடுத்து, தெரிந்த எல்லா முறைகளிலும் அதை உடைக்க முயன்றேன்.

‘ஹெக்ஸா டெசிமல் போல் இருக்கிறது. ஆஸ்கி கோடாக இருக்குமோ?! EA, EF.. E8F0. இரண்டு எண்கள் சேர்த்து ஒரு எண். EA...EF. ஆஸ்கியில் EA என்ன?’ கணிணியில் பார்த்தேன். EA -> ê, EF -> ï. ’இல்லை ஆஸ்கி இல்லை. வேறு ஏதோ..’

ஒரு மணி நேரமானது. ம்ஹூம்! முடியவில்லை. கணிணியில் ஆட்டோ டீக்ரிப்ட் வசதியைத் தொடங்கி விட்டேன். ஆயிற்று மேலும் பதினைந்து நிமிடங்கள். கணிணி பதில் ஒன்றும் சொல்வதாயில்லை. களைப்பாயிருந்தது. அப்படியே மேசையில் தலை வைத்து கண்களை மூடினேன்.

பூர்ணா - இரண்டு வருடங்களாக என் வீட்டில் என்னுடன்தான் இருக்கிறாள். பூர்ணா = அழகு. ஆனால் அவசரக்காரி. அவளைக் காதலிக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். டாக்டரேட்டுக்காக பழந்தமிழாராய்ச்சி செய்து கொண்டிருக்கிறாள். நான் அவ்வப்போது உதவுவேன் - தமிழாராய்ச்சியில் மட்டும்தான்.

’தமிழாராய்ச்சி.... ஆங். அப்படியிருக்குமோ?!. 0BEA, 0BEF இரண்டும் ஆதிகால கணிணி யூனிக்கோடில் பழந்தமிழ் எண்களின் குறியீடுகள்.’ oBEA -> ௪ - நான்கு. 0BEF -> ௯ - ஒன்பது. பூர்ணா ஒரு முறை பழந்தமிழ் எண்களின் பழைய யூனிக்கோடுகள் என்னவென்று தேடிக் கொண்டிருந்தபொழுது, நான் தான் கண்டுபிடித்துச் சொன்னேன். ’புரிகிறது. எல்லா எண்களின் முன்பும் 0B சேர்த்து, அதற்கானப் பழைய யூனிக்கோடு குறியீடைப் பார்த்தால் தகவல் என்னவென்று புரிந்துவிடும்.’

பூர்ணாவின் கணிணிப் பகுதியில் மேய்ந்து பழைய யூனிக்கொடு அட்டவணையை திறந்து வைத்துக் கொண்டேன்.

’oB95. க. oBBE. துணையெழுத்து. oBB2. ல. oBAA. ப. oBCD. ஒற்றெழுத்து ரொம்ப முக்கியம் இப்ப!!’

”காலப்பேசி்யில் அழைக்காதே வசமாக மாட்டிக் கொண்டு விட்டேன் ரா பட் பீட் சாலைக்கு ௨௲௧௧ ௪ ௨௰ காலை ௯ ௩௰க்கு வா”

’௨௲௧௧ என்றால் ..’ அவளது எண்கள் பற்றிய குறிப்புகளை கிளறினேன்.

‘2011 4 20 காலை 9 30க்கு. மை காட். 2011க்கு போயிருக்கிறாள். ஆயிரம் வருடங்களுக்கு முன்னோ பின்னோ காலப்பயணம் செய்வது சட்டவிரோதம் ஆயிற்றே! எதற்கு அங்கே போனாள்?’. காரில் பறக்கும்பொழுது, செயற்கை டிசி இல்லாத சிக்னல்களில் கூட நின்று பறக்கும் பயந்த குடிமகன் நான். ’விதிமுறைகளை மீறி 2011க்கு போவதா?’

ஆனாலும் பூர்ணாவின் மீது எனக்கு ஒரு கவர்ச்சி இருந்திருக்கிறது. அது என்னைக் கால இயந்திரங்கள் வாடகைக்கு விடும் ஏஜென்சி ஒன்றின் வரவேற்பறைக்கு விரட்டியது.

“மிஸ்டர் பிரவீன். விதிமுறைகளெல்லாம் தெரியுமில்லையா? ஆயிரம் வருடங்களுக்கு முன்னேயோ பின்னேயோ போகக் கூடாது. அடுத்த எழுபது வருடங்களுக்கு போகக் கூடாது. உங்க வயசு என்ன?”

“இருபத்தி ஏழு.”

“ம்ம். முந்தைய இருபத்தியெட்டு வருடங்களுக்குப் போகக் கூடாது. இயந்திரத்தை சேதமில்லாமல் ஒப்படைக்கனும். சின்ன சேதமானாலும், இயந்திரத்தின் முழு விலையையும் செலுத்தனும். இங்கே உங்கள் ஒப்புதலை சொல்லுங்க.” சொன்னேன்.

இயந்திரத்தை அணுகினேன். அது தரையில் ஓடும் ஒரு பழைய மாடல் கார் மாதிரிதான் இருந்தது. ஸ்டீயரிங், கியர், பிரேக் போன்ற பழைய வஸ்துக்களுடன், கண்ட்ரோல் பேனல், ஹோலோகிராஃபிக் டிஸ்பிளேக்கள் போன்ற புதிய சாமாச்சாரங்களும் இணைந்திருந்தன.

உள்ளே ஏறி முதலில் ரா பட்டுக்கு செலுத்தினேன். மனதில் ஒரு பயம். ’நான் எங்கே போகிறேன் என்பதையெல்லாம் கண்காணிப்பார்களா?’. ராஜீவ்; அவனைக் கேட்கலாம். அவன் கால இயந்திரங்கள் ஷோ ரூமில்தான் வேலை செய்கிறான். அவனை வீஃபோனில் அழைத்தேன். குழப்பமான ஒளிக்கோர்வைக்குப் பின் சிக்னல் வீக் என்று சொல்லியது.

யோசித்துக் கொண்டே இயந்திரத்தை செலுத்திக் கொண்டிருந்தேன், ‘பூர்ணா ஏற்கனவே 2011க்கு சென்றிருக்கிறாள். தடை செய்யப்பட்ட வருடம். இதுவரை அவளைப் பற்றி ஏதும் கேள்வியில்லை. ஸோ, கண்டிப்பாக கண்காணிக்கப்படவில்லை.’

ரா பட், பீட் ரோட் வந்து விட்டது. ஒரு ஓரமாக ஒதுக்கி நிறுத்தினேன்.

டெஸ்டினேஷன் பேடில்,’2011-ஏப்ரல்-20 9.30 AM' என்று அமைத்தேன். ’Travel' பட்டனை அழுத்த...
சிலீலீலீங்...
டொம்ம்ம்
க்ளீளீளீஈச்
எனது இயந்திரத்தின் முன்,பின் கண்ணாடி கூரை எல்லாம் திடீரென்று நொறுங்கியது. என்ன நடக்கிறது என்று புரிவத “டாய் ங்...தா எறங்குடா” என்று கத்தியவாறு ஒரு முரட்டு உருவம் என்னை நோக்கி ஓடி வந்தது. கையில் அது என்ன? வாள் மாதிரி பின் பக்கம் வளைந்து கொண்டு?! ஏதோ ஓர் உந்துதலில் இயந்திரத்தின் கதவைத் திறந்து வெளியே குதித்தேன். நிறைய பேர் அதே போல் கும்பல் கும்பலாக அந்த வாள், தீப்பந்தம், கட்டை முதலியவற்றுடன் எல்லாப் பக்கமும் ஓடிக் கொண்டிருந்தனர். “198, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை” என்று எழுதியிருந்த போர்ட் ஒன்று என் அருகே விழுந்து உடைந்தது. எரிந்து கொண்டிருந்த போஸ்டர் ஒன்றில்
“வாழும் தெய்வமே....
வெற்றிக் கனி....
காணிக்கையாக்குகி...”
சர சர சர சர
எனது இயந்திரத்தின் முன்புறம் தீப்பிடித்துக் கொண்டது. தீ வைத்தவன் என்னை நோக்கி ஒரு கட்டையை விட்டெறிந்தான். அது என் மூக்கைத் தொடுமுன் ஒரு பெண் என் மேலே விழுந்து என்னைத் தள்ளிக் கொண்டே ஓட ஆரம்பித்தாள். “சீக்கிரம் ஓடு பிரவீன்.”

“பூர்ணா!? என்ன நடக்குது இங்க?”

“அப்புறம் சொல்றேன். முதல்ல ஓடு.” ஓடினோம். ஒரு குறுகலான கட்டிடத்துக்குள் புகுந்து கொண்ட பின் கொஞ்சம் மூச்சு விட முடிந்தது.

”பூர்ணா, வாட் த ஹெல் ஆர் தீஸ்? நீ எதுக்கு இங்கே வந்தே? என்ன நடக்குது இங்கே?”

”காம். காம். ஒன்னொன்னாக் கேளு.”

“நீ எதுக்கு இந்த தடை செய்யப்பட்ட 2011க்கு வந்தே?”

“ஆராய்ச்சிக்குத்தான். இந்த வருடம் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில், தமிழின் உலகப்பொது மொழி முன்னேற்றத்துக்குக் காரணமான பல முக்கிய முடிவுகள் எடுத்தாங்கன்னு ஒரு தகவல் தெரிஞ்சது. ஆனா என்னென்ன முடிவுகள்னு தெரியலை. அதான், நேர்லயே வந்து பார்க்கலாம்னு வந்தேன்.”

“இங்கே மாநாடு எதுவும் நடக்கிற மாதிரித் தெரியலையே?”

“தேதி சரியாத் தெரியலை. ஒரு உத்தேசமா வந்தேன். தேர்தல் கலவரமாம். கலவரம்னெல்லாம் ஹிஸ்ட்ரீலதானே படிச்சிருக்கோம். இப்பத்தான் நேர்ல பாக்குறோம். த்ரில்லிங்கா இல்லை. நம்ம முன்னோர்கள் எவ்வளவு வீரமா சண்டை போடறாங்க பார்த்தியா?” பூர்ணா சில சமயம் இப்படித்தான்.

“வீரமா சண்டையா? காட்டுமிராண்டித்தனமா இருக்கு.”

“நான் கொண்டு வந்த இயந்திரத்தையும் எரிச்சுட்டாங்க. அதான் என்னைக் கூட்டிப்போக உன்னை இங்கே வரச் சொன்னேன். டைரக்டா காலப்பேசியில் கூப்பிட்டாலோ, நேரடியா தகவல் அனுப்பிச்சாலோ, நம்ம காலத்துக் குற்றத்தடுப்புப் பிரிவு அதை ட்ரேஸ் செய்துருவாங்க. அதான் க்ரிப்ட் பண்ணித் தகவல் அனுப்பினேன். ஆனா, இப்ப உன்னோடதையும் எரிச்சுட்டாங்க.”

“அறிவிருக்கா? கலவரம் நடக்குதுன்னு தெரியுதில்ல. அப்புறம் எதுக்கு இங்கே வரச் சொன்னே. வேற ஏதாவது கொஞ்சம் அமைதியான இடத்துக்கு வரச் சொல்லியிருக்கலாம்ல?”

“நான் தகவல் அனுப்பும்போது இந்த இடத்துல கலவரம் ஏதும் இல்லையே. அதான் அப்படி அனுப்பினேன். இப்ப என்ன செய்றது?”

“தெரியலை. எத்தனை நாள் கலவரம் நடக்கும்? எப்படியும் ரெண்டொரு நாள்ல அடங்கிறாதா? அடங்குனப்புறம் யாரையாவது நண்பர்களை அழைக்கலாம்.”

“விளையாடறியா? நாம இங்க ஒரு நாள்கூடத் தங்க முடியாது. இந்தக் காலத்துப் பணம் நம்மகிட்ட இல்லை. ஒன்னும் பண்ண முடியாது. அதனால சீக்கிரம் நாம போயாகனும்.”

வெளியே சத்தம் குறைந்து கொண்டே போனது. இருபது நிமிடங்களுக்குப்பிறகு சத்தமேயில்லை. பூர்ணாவை உள்ளேயே இருக்கச் சொல்லிவிட்டு நான் மட்டும் வெளியே வந்து பார்த்தேன்.

ஆங்காங்கே ஏதேதோ எரிந்து கொண்டிருந்தன. வாகனங்கள் தாறுமாறாக சிதறியிருந்தன. ஆனால் தெருவில் ஆள் நடமாட்டமேயில்லை. கொஞ்ச நேரத்துக்கு முன் ஓடிக் கொண்டிருந்த கும்பல் எதையும் கண்ணுக்கு எட்டிய தூரம்வரைக் காணவில்லை. நான் இன்னமும் பீட்டர்ஸ் சாலையில்தான் இருக்கிறேன் என்று உறுதிப்படுத்திக் கொண்டேன்.

பூர்ணாவை அவசரமாக அழைத்தேன். ”உன் காலப்பேசியைக் கொடு.”

அவள் எனக்கு அனுப்பிய மெஸேஜை எடுத்து திருத்த ஆரம்பித்தேன். “யாருக்குத் தகவல் அனுப்புகிறாய்?”.

“ராஜீவிற்கு.”, ’இப்பொழுது மணி என்ன?’, ”பத்து பதினைந்துக்கு கோட் என்ன?”

“F0 E7 EB. ஏய்? என்ன செய்கிறாய்? மடையா!”

“கவலைப்படாதே! நீ அனுப்பிய முறையில் என்க்ரிப்ட் பண்ணிதான் அனுப்பினேன்.”

“எனக்கு அறிவிருக்கான்னு அப்பக் கேட்டே? இப்ப உனக்கு அறிவிருக்கா?”

“ஏன்? என்ன?”

“இந்த யூனிக்கோட் முறை உனக்கும் எனக்கும்தானே தெரியும். ராஜீவிற்கு எப்படித் தெரியும்? இது பழைய யூனிகோடு. நமது காலத்தில் புழக்கத்திலேயே கிடையாது. இதை ராஜீவ் எப்படி டிக்ரிப்ட் செய்து, இங்கே வந்து, நம்மைக் காப்பாற்றி... ஏய்! அங்கப் பார்”

அங்கே ஒரு கார் வந்து கொண்டிருந்தது. உள்ளேயிருந்தது.... ராஜீவ். ’வந்துவிட்டான். கில்லாடிடா’. கார் வேகமாக எங்கள் அருகே வந்து நின்றது. “சீக்கிரம் ஏறுங்கள்”. தாவிக் கொண்டோம். டெஸ்டினேஷன் பேடில் நிகழ்காலத்தை அமைத்து “டிராவல்”ஐ அழுத்த...

‘அப்பாடா. தப்பித்து விட்டோம்.’

எங்களை வீட்டில் இறக்கிவிட்டு ராஜீவ், “ஸீ யூ படீஸ். கேட்ச் யூ ஸூன்” என்று கிளம்ப எத்தனிக்க, நான் “ராஜீவ்! ஒரு நிமிஷம்டா. நான் வாடகைக்கு எடுத்துட்டுப் போன இயந்திரத்தைத் திரும்பக் கொண்டு வரலையே. இந்த வருடத்துக்குத்தான் போனேன்னு குற்றத்தடுப்புப் பிரிவு டிராக் பண்ணுவாங்களா?”

ராஜீவ் கண்ணடித்தான். “அதெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது. கால இயந்திரத்தை டிராக் செய்யவெல்லாம் நாம் இன்னும் டெக்னிக்கலாக வளரவில்லை. எல்லாம் ஒரு பயமுறுத்தல்தான். நானே பலமுறை அந்த மாதிரிப் போயிருக்கேன்.”

“சரி. வாடகைக் கம்பெனிக்காரன் ஏதாவது ஏடாகூடமா கேள்வி கேட்பானா? இயந்திரம் காணோம்னா எந்த வருடத்துக்குப் போனீங்கன்னு கேள்வி வராதா?”

“கவலைப்படாதே. தப்பித்தவறி அந்தக் கம்பெனிக்காரன் உன்னை காண்டாக்ட் பண்ணினா, தொலைஞ்சு போன இயந்திரம் எங்கேன்னெல்லாம் கேக்க மாட்டான். வேற இயந்திரம் வாடகைக்கு வேணுமான்னு வேணாக் கேட்பான். ஏன்னா, இயந்திரத்தோட விலையை ஏற்கனவே உன்கிட்ட வாடகையா வசூலிச்சிருப்பான். இது ரொம்ப ரிஸ்கான பிஸ்னஸ். வாடகைக்கு எடுத்துட்டுப் போறவனெல்லாம் திரும்ப வருவான்னு நிச்சயமேயில்லாத பிஸ்னஸ். அதுனால முதல்லேயே ஃபுல் அமவுண்டையும் கஸ்டமர்ட்டக் கறந்துடுவாங்க. உன்ன மாதிரி திரும்பக் கொண்டு போய் இயந்திரத்தைக் கொடுக்கிற கேஸ்கள் ரொம்பக் கம்மி. ஸோ. டோண்ட் வொரி. பை”, போய் விட்டான்.

உள்ளே நுழைந்ததும் நுழையாததுமாக பூர்ணா, ”சரியான பயந்தாங்கொள்ளிடா நீ. உன்னோட ஸேஃப்டிக்கு இதெல்லாம் அவன்கிட்டே கேட்டியே! ஒரு தாங்ஸ் சொன்னியா?”

’அட, ஆமாம் மறந்தே விட்டேன்.’ “சொல்லிட்டாப் போச்சு.” வீஃபோனில் ராஜீவை அழைத்தேன். ராஜீவைப் போன்ற உருவம் தோன்றி, “ஹாய் ஃபிரண்ட்! நான் அலுவலக நிமித்தம் விண்வெளி நகரத்துக்கு சென்றிருக்கிறேன். அவசர செய்தியென்றால் எனது விண்வெளி நகர எண்ணுக்கு அழையுங்கள். எனது விண்வெளி நகர எண் ஆறு ஒன்று எட்டு எட்டு ....”

“அதுக்குள்ள அடுத்த பிரயாணமா? கலக்குடா! அவசரம் ஒன்னுமில்லை. திரும்பி வந்ததும் தெரியப்படுத்து. ஒரு பார்ட்டி வச்சுக்கலாம்” என்று பதிந்து விட்டுத் துண்டித்தேன்.


ஒரு மாதம் கழித்து, அந்த ஐந்து நட்சத்திர ஓட்டலில், காற்றில் மிதந்து கொண்டிருந்த மேஜையைச் சுற்றி, நான், பூர்ணா, ராஜீவ் மூவரும் நாற்காலிகளில் மிதந்து கொண்டிருந்தோம்.

“என்னடா திடீர்னு பார்ட்டி? ஏதாவது...?” குறும்பாக சிரித்தான்.

“எல்லாம் ஒரு தாங்ஸ் கிவ்விங்தான்.”

“ராஜீவ், அந்த மெஸேஜை எப்படி நீ டிக்ரிப்ட் பண்ணினே?! அதான் ஆச்சர்யமா இருக்கு” பூர்ணா.

“எந்த மெஸேஜ்?”

“என்னடா, தெரியாத மாதிரிக் கேட்கிறே? உன்னோட காலப்பேசிக்கு அனுப்பினோமே அந்த மெஸேஜ்.”

“ஆமாம் அந்த மெஸேஜைப் பார்த்தேன். ஒன்றும் புரியலை.”

”அப்புறம் எப்படிடா கரெக்டா அன்றைக்கு ரா பட்டுக்கு வந்தே?”

“ரா பட்டுக்கா? என்றைக்கு? எதுக்கு?”

”என்னடா விண்வெளிப் பிரயாணத்துல எல்லாம் மறந்துட்டியா? ஒரு மாதம் முந்தி என்னையும் பூர்ணாவையும் 2011லிருந்து காப்பாற்ற ரா பட் வந்தியே. அதைச் சொல்றேன். அதுக்குதான் இந்த தாங்ஸ் கிவ்விங் பார்ட்டி!”

“அன்னைக்கு என்ன நடந்தது விளக்கமா சொல்லு.”

“ஆமாம். அதை உன்கிட்டே சொல்லவேயில்லேல்ல. அன்றைக்கு எனக்கு ஒரு மெஸேஜ் வந்தது பூர்ணாவிடமிருந்து. அதை டீக்ரிப்ட் செய்து..........அழைத்தேன். அதற்குள் நீ விண்வெளி நகரம் போய்ட்டே.”

“வெய்ட் எ மினிட்.” ராஜீவ் அவனது காலப்பேசியை எடுத்தான். நான் அவனுக்கு அனுப்பிய மெஸேஜை என் முன் நீட்டி, “இதற்கு அர்த்தம் சொல்லு.”

“காலப்பேசி்யில் அழைக்காதே வசமாக மாட்டிக் கொண்டு விட்டேன் ரா பட் பீட் சாலைக்கு ௨௲௧௧ ௪ ௨௰ காலை ௰ ௧௫க்கு வா”

“௨௲௧௧ ௪ ௨௰ காலை ௰ ௧௫க்கு அப்படின்னா?”

”2011 4 20 காலை 10 15க்கு”

“எக்ஸ்கியூஸ்மீ படீஸ். நீங்க சாப்பிட்டுக்கிட்டிருங்க. நான் சீக்கிரம் திரும்பி வந்துடறேன். ஒரு அவசர வேலையிருக்கு.”

“டேய். டேய். பார்ட்டிக்கு வந்துட்டு எங்கடா அவசரமா போற?”

“2011 4 20 காலை 10 15க்கு. உங்க ரெண்டு பேரையும் காப்பாற்ற.”

7 comments:

Thamiz Priyan said...

யோசிக்க இயலாத ட்விஸ்ட்

யோசிப்பவர் said...

நன்றி தமிழ் பிரியன்!

ரவி said...

எதுவும் உள்குத்தில்லையே ?

அருமையான கதை

மு.கு * பாதி படிச்சேன்

யோசிப்பவர் said...

உள்குத்து எதுவுமில்லை ரவி!;-)
அதென்ன மு.கு*?!

வெண்பூ said...

சான்ஸே இல்லை யோசிப்பவர்... கலக்கல்.

வெண்பூ said...

//
“2011 4 20 காலை 10 15க்கு. உங்க ரெண்டு பேரையும் காப்பாற்ற.”
//

இந்த வரி இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் சூப்பரா இருந்திருக்கும். நம்புங்கள், முதல் கமெண்ட் போட்ட போது இந்த வரியை கவனிக்கவில்லை.

யோசிப்பவர் said...

கருத்துக்கு மிக நன்றி வெண்பூ,
//இந்த வரி இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் சூப்பரா இருந்திருக்கும். //
அந்த வரி இருக்கும்பொழுதே நிறைய பேர் கதை புரியவில்லை என்கிறார்கள். அது இல்லாவிட்டால் (என்) நிலைமை மிக மோசமாகியிருக்கும்.;-))