Sunday, July 10, 2011

சமச்சீர் விச்சு

சமச்சீர் தீர்ப்பால், அம்மாவை விட அதிகமாய் கவலைப்பட்டது விச்சுவாகத்தான் இருக்க முடியும். (கதாசிரியரின் இடைச் செருகல்:- அம்மா என்பது விச்சுவின் அம்மாவைக் குறிக்கிறது என்பதை பணிவுடன்(!) தெரிவித்துக் கொள்கிறேன்). SSLC நேரத்தில் இப்படி மாறி மாறி முடிவுகள் வருகின்றனவே என்பதுதான் அம்மாவின் கவலை.

விச்சுவை, குறைந்தபட்சம் ஸ்டேட் ஃபர்ஸ்ட் எடுக்க வைத்து விட வேண்டும் என்று அம்மாவின் திட்டம். அதற்காக விடுமுறையிலேயே, நெட்டில் டவுண்லோடு செய்த சமச்சீர் பாடங்களை வைத்து, ரெகுலர் கோச்சிங், திடீர் கோச்சிங்,ஸ்பெஷல் கோச்சிங், ஒன்வர்டு கோச்சிங் என்று பலவித போராட்டங்களில் விச்சுவை ஈடுபடுத்தியிருந்தார். விடுமுறையில் சந்தோஷமாக இருக்க முடியவில்லையே என்று விச்சு கடுப்பில் இருந்தாலும், காந்திஜி, நேருஜி, நேதாஜி இவர்களின் போராட்டங்களை எண்ணிப் பார்த்து தன் மனதை திடப்படுத்திக் கொண்டான்.

சமச்சீர் பாடத்திட்டத்தில், ஒரு மாதிரி பாதிக்கு மேல் படித்து முடித்து விட்டான். அப்போது வந்ததே ஒரு அதிரடி தீர்ப்பு! ரெண்டு நாளில் விச்சுவின் சமச்சீர் பணால் ஆனது!! இனி மெட்ரிக் பாடத்திட்டம் தானாம்!!!

என்ன கொடுமை சரவணன் சார்! படிச்சதெல்லாம் வேஸ்ட் ஆயிட்டே... ஏதோ இந்த மட்டும் ரெண்டு வாரம் உபரி லீவு கிடைத்ததே... ஜாலியா இருக்க வேண்டியதுதான் என்று தன் மனதை விச்சு ஆறுதல் படுத்தினாலும், அம்மா விடவில்லை.

பழைய புத்தகம் ஒன்றை வாங்கி, டியூசன் படிக்க ஏற்பாடு செய்ய, விச்சுவின் தசாவதார போராட்டம் மீண்டும் முதல் படியிலிருந்து ஆரம்பமானது!

உனக்கு ஸ்டேட் ஃபர்ஸ்ட்டை தவிர வேறெதுவும் கிடைக்க வாய்ப்பே இல்லைடா விச்சு!”, என்று அம்மா ஏற்றி விட, அவனும் மெட்ரிக் பாடங்களை உருப்போட ஆரம்பித்தான்.

பள்ளியிலும் ஸ்பெஷல் கோச்சிங்கை திருட்டுத்தனமாய் ஆரம்பித்து விட்டனர். யாராவது கேட்டா நானாகத்தான் சந்தேகம் கேட்க வந்தேன்னு சொல்லணும்னு அறிவுரை வேறு...! நாங்களெல்லாம் அந்தளவிற்கு சின்சியராக ஆயிட்டோமா....? எரிச்சலில் விச்சு இருந்தாலும், படிப்பதை விடவில்லை. ஸ்டேட் ஃபர்ஸ்ட்ன்னா சும்மாவா?

ஆனால், ரெண்டாவது போராட்டத்திற்கும் இப்படி கோர்ட் மூலம் தடங்கல் வரும்னு எதிர்பார்க்கவேயில்லை.

விச்சுவிற்கு தலை சுற்றியது... இனி என்ன செய்ய? மீண்டும் சமச்சீர் பாடங்கள் தானா? இல்லை புதிதாக சிலபஸ் தயாரிப்பார்களா?

என் பையனுக்கு மட்டுந்தான் இப்படியெல்லாம் நடக்கணுமா?, என்று அம்மா அங்கலாய்த்தாலும், விக்கிரமாதித்தன் போல சற்றும் மனந்தளராமல், மீண்டும் சமச்சீர் பாடத்தை ஆரம்பித்தார்.

அடப்போம்மா... ரெண்டு நாள் ஃபிரீயா விடுங்க

சமச்சீர் கூட நல்லதுதான் விச்சு... பாடங்கள் கம்மி. நல்ல மார்க் வாங்கலாம். 500க்கு 500 நீதான் வாங்கப் போறியோ என்னவோ...!என்று பாஸிட்டிவாக அம்மா கூற, மீண்டும் சமச்சீர் ஜெராக்ஸுகள் தூசி தட்டப்பட்டன.

ஒருவழியாய் பள்ளி ஆரம்பித்து விட்டது. முதல் கிளாஸ் கூட ஒழுங்காய்தான் போனது. அடுத்து வந்த சயின்ஸ் மாஸ்டர் தான் ஒரு பெரிய ஹிரோஷிமா அணுகுண்டைப் போட்டார்.

இன்னும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வர வேண்டியதிருக்குடா... பழையபடி மெட்ரிக் சிலபஸே வரலாம். அதனால் என்ன பண்றீங்க... தினமும் ரெண்டு சிலபஸிலும் ஹோம்வொர்க் தருவேன்! ரெண்டையும் படித்துவிட்டு வரவேண்டும்!!”, என்று அக்கறையோடு கூற, விச்சுவோடு சேர்ந்து அனைத்து மாணவர்களும் அழாத குறைதான்.

அவருக்கென்ன.... கூறிவிட்டார்....

அகப்பட்டவன்...”, என்று விச்சு ஆரம்பிக்க, “நாங்களடா...”, என்று சக மாணவர்கள் சோகத்தோடு கோரஸ் பாடினர்.

சயின்ஸ் மாஸ்டர் பற்ற வைத்த திரி, மற்ற ஆசிரியர்களுக்கும் தெரிந்து விட்டது. எங்களை கொல்லணும்னா எல்லோரும் ஒற்றுமையாய்டுவாங்களே...! விளைவு... எல்லா ஆசிரியர்களும் மெட்ரிக், சமச்சீர்னு ரெண்டு திட்டங்களிலும் ஹோம்வொர்க் கொடுக்க, விச்சு காண்ட்டாயிட்டான்!

டேய்... இந்த குளறுபடி எப்படா முடியும்...?”

டிசம்பர்ல கூட தீர்ப்பு வந்து பாடத்திட்டம் மாற்றப்படலாம்னு எங்க மாமா சொல்றாங்கடா...!

ஒரேடியா ஊத்தாதேடா...

நெசமாத்தாண்டா. கொஞ்ச வருஷத்திற்கு முன்னால் என்ஜினியரிங் நுழைவுத்தேர்வு விஷயமா, கோர்ட், கேஸ்னு சென்று, ஒரு முடிவுக்கு வர ஆறு மாசம் ஆனதாம்...

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எப்படி வந்தாலும், அப்பீல் அது இதுன்னு இழுத்தடிப்பாங்களாம்டா...

இப்படி பசங்க வேறு பீதியை கிளப்பிக் கொண்டிருக்க, விச்சு குழப்பத்தில் இருந்தான்.

இப்பவும் அம்மா விடவில்லை.

உன் சயின்ஸ் மாஸ்டர் சொல்றது சரிதான். கோர்ட்க்கு போயிட்டாலே தீர்ப்பு வரவும் லேட்டாகும். அப்படியே வந்தாலும் அப்பீல் பண்ணி பண்ணி இழுத்துக்கிட்டே தான் இருப்பாங்க. அதனால, எந்த பாடத்திட்டம்னு தெளிவா தெரியற வரைக்கும் ரெண்டையும் படிடா... உன்னால் முடியும்டா விச்சு... உன் திறமை உனக்கே தெரியாதுடா...!”, என்று அம்மா உற்சாகப்படுத்தினார்.

நெசமாத்தானா....? என் திறமை எனக்கே தெரியலையோ...? ஐயோ.... ஒரு பாடத்திட்டத்தில் படிக்கிறதுக்குள்ளே நொந்து நூடுல்ஸாகி விடுகிறேன்... இதுலே ரெண்டா...? நோ... நோ... மனந்தளரக்கூடாது... யூ கேன் டூ... நம்பிக்கை... நம்பிக்கை... என்னத்த நம்பிக்கை...!

சமச்சீர், மெட்ரிக் என்ற இரண்டு வார்த்தைகளும் அவன் மூளையை சுற்றி சுற்றி வட்டமிட்டு விளையாடிக் கொண்டிருந்ததை, தடுக்க நினைத்து முடியாமல், வேறு வழியில்லாமல் அதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே விச்சு தூங்கி விட்டான்.

அடுத்த நாளிலிருந்து விச்சு தெளிவாகி விட்டான். மாஸ்டர் சொன்னபடி ரெண்டு சிலபஸிலும் படிக்க வேண்டியது தான்! முடிவு எதுவாகுதோ... ஆகட்டும். படிப்பது நமக்கு நல்லது தானே!

இப்படியே ரெண்டு வாரமாக, ரெண்டு பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான் விச்சு! இருந்தாலும் உற்சாகமாகவே இருந்தான். மற்ற மாணவர்களெல்லாம் ஒரு சிலபஸிலேயே திணறிக் கொண்டிருக்க, அவன் மட்டும் ரெண்டிலும் கலக்கிக் கொண்டிருந்தான். அப்பாட... இது கூட ஒருவிதமா செட்டாகிவிட்டது.

டியூஷன் முடிந்து விச்சு அன்று வீட்டிற்கு வந்த போது, இரவு மணி ஒன்பது. அங்கோ அம்மாவும், அப்பாவும் உற்சாகமாக பேசிக் கொண்டிருந்தார்கள். அப்படியென்ன சந்தோஷமான செய்தி. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வந்து விட்டதா...? என்ன பாடத்திட்டம்னு முடிவாகி விட்டதா....?

கேள்விக்குறியுடன் அப்பாவிடம் சென்றான்.

விச்சு, அப்பா நீண்ட நாளா கேட்டுட்டு இருந்த புரமோஷனும், டெல்லி டிரான்ஸ்பரும் வந்திடிச்சு...! வீடு, கார் எல்லாம் கம்பெனியே கொடுக்குது...! வாவ்... ஐயாம் எக்சைட்டட்.... இன்னும் ரெண்டு நாளில் நாமெல்லாரும் டெல்லி போகிறோம்!

டெல்லியா....? அப்படின்னா என் ஸ்கூல்....?”

கம்பெனியே ஸ்கூல் அட்மிஷனையும் பார்த்துட்டாங்க. இண்டர்நேஷனல் ஸ்கூல். இந்த சமச்சீர், மெட்ரிக் தொல்லைகள் கிடையாது. உனக்கு இனி சென்ட்ரல் போர்டு சிலபஸ்டா....!”, என்ற அப்பாவின் கூற்றைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்தான் விச்சு.

என்னது.... மறுபடியும் முதலில் இருந்தா....?”


- எழுதியவர் ஸ்ரீதேவி