Tuesday, January 11, 2011

60 வயதுப் பாலம்

அன்று :
அம்மா இறந்து விட்டாள். அழுவதா! அல்லது வேடிக்கை பார்ப்பதா! என்று புரியாத வயது. தாய் தந்தை இல்லாதவன் அனாதை என்றும், யாராவது ஒருவர் இறந்தாலும் பாதி அனாதை என்று சொல்லுவார்கள். ஆனால் என்னைச் சுற்றிலும் ஏராளமான உறவினர்கள். தாத்தா பாட்டி, அப்பா, மாமன்மார், அத்தை, பெரியம்மா, அவரது பிள்ளைகள், சின்னம்மா, என்று ஏராளம்….

இன்று :
”அப்பாவுக்கு லேசான நெஞ்சுவலியாம்! டாக்டரிடம் போகலாம்.”, ”இல்லை இல்லை. அப்பல்லோவுக்கு போய் வைத்தியம் செய்யலாம்.”, என்று குரல்கள் கேட்கின்றன. சுற்றிலும் பார்க்கிறேன். என்னுடைய 4 பிள்ளைகள், 4 மருமக்கள், 8 பேரன் பேத்திகள், மனைவி என்ற உறவுகளில் ஒரு பட்டாளமே நிற்கிறார்கள்.

அது சரி!… அன்று இருந்த உறவினர்கள் என்ன ஆனார்கள்? இன்றைக்கு இருக்கும் உறவினர்கள் அன்று ஏன் இல்லை? அவர்களுக்கு இவர்களைப் பற்றி ஏதாவது தெரியுமா? அல்லது இவர்களுக்குத்தான் அவர்களைப் பற்றி ஏதாவது தெரியுமா? அவர்களுக்கும் இவர்களுக்கும் இடையில் ’நான் ஒருவன்’ என்ற சம்பந்தத்தைத் தவிர வேறு என்ன சம்பந்தம்?

என்ன! பாலத்துக்கு அக்கரையில் அவர்கள்! இக்கரையில் இவர்கள்! அன்று எனக்கு வயது 10. இன்று 70. அவ்வளவுதான் வித்தியாசம். யோசித்தேன். ஜென் தத்துவம் ஒன்று ஞாபகத்திற்கு வந்தது.

இந்த உலகில்,
எல்லாம் இருக்கிறது.
ஆனால் ஒன்றுமே இல்லை.

எழுதியவர் G.ராமசாமி